பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த கட்டமாக, மாவட்ட வாரியாக, இணை இயக்குனர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முதன்மை கல்வி அதிகாரிகளை கண்காணிக்கும் பணியில், இணை இயக்குனர்கள் ஈடுபடுவர்.தமிழக பள்ளிக்கல்வியில், 40 ஆண்டுகளுக்கு பின், மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்திருத்தம், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக, தொடக்க கல்வி மற்றும் மெட்ரிக் இயக்குனரகத்தின் மாவட்ட அலுவலகங்கள் மூடப்பட்டன.அந்த நிர்வாகத்தில் இருந்த பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்குனரத்தின் மாவட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வந்தன. அதிகாரம்மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.க்கள், கூடுதல் அதிகாரம் மிக்கவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். பணி நியமனம், பணி மாறுதலுக்கான அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.அடுத்த சீர்திருத்தமாக, சென்னையில், தலைமையகத்தில் பணியாற்றும் இணை இயக்குனர் பதவிகள், மண்டல இணை இயக்குனர் பதவியாக மாற்றப்பட உள்ளது.
இதன் படி, பள்ளிக்கல்வி தலைமையகத்தில், சில இயக்குனர்கள் மட்டும் பணியில் இருப்பர்; மற்ற இணை இயக்குனர்கள், மண்டல வாரியாக, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி, விழுப்புரம், வேலுார், தஞ்சாவூர், நாமக்கல் என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட உள்ளன. இவற்றில், ஒவ்வொரு மண்டல தலைமையகத்திலும், அருகில் உள்ள மாவட்டங்கள் இணைக்கப்படும்.அந்த மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகள், நேரடியாக, இணை இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும்.
அரசாணைஇணை இயக்குனர்களுக்கு உதவியாக, துணை இயக்குனர்களும், மண்டல அலுவலகத்தில் நிர்வாக பணிகளை மேற்கொள்வர்.இதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சட்ட ஆய்வு நடத்தி, அமைச்சர் மற்றும் செயலரின் மேற்பார்வையில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. விரைவில், அரசாணை வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
This comment has been removed by the author.
ReplyDelete